ஆராய்ச்சிக்கு விடப்பட்ட பிணந்தின்னி கழுகு மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

 
கழுகு

மராட்டிய மாநிலத்தில் உள்ள தடோபா அந்தோரி புலிகள் காப்பகத்தில் வளர்க்கப்பட்டு வந்த வெண்முதுகு பிணந்தின்னி கழுகு ஒன்று, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வானொலி கழுத்துப்பட்டை பொருத்தப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. அங்கிருந்து இடம்பெயர்ந்து கர்நாடக மாநிலம் கல்புர்கி பகுதிக்குச் சென்ற அந்தக் கழுகிற்கு உடல்நிலை சரி இல்லாததால் அங்குள்ள வனத்துறையினர் அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் கழுகுகள் அதிகமாக வாழும் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி இந்தக் கழுகை வனத்துறையினர் விடுவித்தனர்.

முதுமலை காப்பகத்திற்குள் மற்ற கழுகுகளுடன் இணைந்து இந்தப் பறவை புதிய சூழலுக்குப் பழகிக் கொள்ளும் என்று அதிகாரிகள் பெரிதும் நம்பினர். ஆனால் புதிய சூழலுக்குப் பழக முடியாத இந்தக் கழுகு முதுமலை காப்பகத்தைச் சுற்றியுள்ள கூடலூர், கல்லட்டி மற்றும் எப்பநாடு ஆகிய மலைச்சரிவு பகுதிகளில் தொடர்ந்து சுற்றித் திரிந்தது. இதனால் வனத்துறையினர் இந்தக் கழுகைப் பிடித்து மீண்டும் சீகூர் வனப்பகுதியில் விடுவித்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

Radio-tagged white-rumped vulture dies of electrocution in Nilgiris - The Hindu

இந்நிலையில் எப்பநாடு வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அங்குள்ள உயர்மின்னழுத்தக் கம்பியில் கழுகு மோதியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. கழுகின் இறப்பை உறுதி செய்த வனத்துறை அதிகாரிகள் இந்தத் துயரச் சம்பவத்தை மராட்டிய மாநில வனத்துறைக்கும் முறைப்படி தெரிவித்துள்ளனர். காட்டுப் பகுதியில் உள்ள மின்சாரக் கம்பிகள் பறவைகளின் உயிருக்கு ஆபத்தாக முடிவது இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.