இன்று நாடு முழுவதும் 244 மாவட்டங்களில் போர்க்கால ஒத்திகை!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் விளைவாக, மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் போர்க்கால தயார்நிலை ஒத்திகைகளை நடத்தும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த நாடு தழுவிய போர் ஒத்திகை எங்கெல்லாம் நடைபெறும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் 259 இடங்களில் இந்த ஒத்திகை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், தமிழ்நாட்டில் இருந்து சென்னை மாநகரம் மட்டும் இடம்பெற்றுள்ளது. இத்துடன் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரு (நகர்ப்புறம்), கொச்சி, திருவனந்தபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களும் இதில் அடங்கும். நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த போர் ஒத்திகை நடைபெற உள்ளது.
இன்று நாடு முழுவதும் 244 மாவட்டங்களில் மாலை 4 மணிக்கு போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற இருப்பதாகவும் இதனை தொடர்ந்து 5 மணி நேரம் ஒத்திகை நடைபெறவுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 4 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்தப்படுகிறது. கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 1971 இந்தியா பாகிஸ்தான் போர் நடந்து 53 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் தற்போது mock drill நடத்தப்படுகிறது.