காடலோனியாவில் கடும் தண்ணீர் பஞ்சம்.. கப்பலில் கொண்டு வரப்படும் குடி நீர்..!!
ஸ்பெயினின் தன்னாட்சிப் பகுதியான காடலோனியாவின் தலைநகரான பார்சிலோனாவில் குடிக்கும் தண்ணீரைப் படகுகளில் கொண்டுவரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐரோப்பாவின் 5-வது பெரிய நகரும் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய நகருமான பார்சிலோனா உள்ளிட்ட காடலோனியாவின் 60 லட்சம் மக்களுக்குத் தண்ணீர் வழங்கும் ஏரிகளின் கொள்ளளவில் 18 சதவிகிதமே தண்ணீர் இருக்கிறது. ஸ்பெயின் நாட்டிலுள்ள அனைத்து ஏரிகளையும் சேர்த்தாலும் கொள்ளளவில் வெறும் 43 சதவிகிதம் மட்டும் தண்ணீர் இருக்கிறது. கடலோனியாவில் வறட்சிக் காலம் நீடித்த நிலையில், பருவகால மாற்றங்கள் காரணமாக வெப்பமும் வறண்ட காலநிலையும் இணைந்துகொண்டதே தற்போதைய மோசமான நிலைமைக்குக் காரணம் என்று ஸ்பானிய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
கடலோனியா தற்போது அதிகாரப்பூர்வமாகவே வறட்சியைப் பொருத்தவரையில் 'நெருக்கடி நிலைக்கு முந்தைய' கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக ஒரு நாளுக்கான தனிநபரின் தண்ணீர்ப் பயன்பாடு 230 லிட்டர்களிலிருந்து 210 லிட்டர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஐரோப்பாவின் மிகப் பெரிய கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தைத்தான் குடிநீருக்காக பார்சிலோனா நம்பியிருக்கிறது. காடலோனியா முழுவதும் வீதிகளைச் சுத்தப்படுத்தவும் புல்வெளிகளுக்குத் தண்ணீர் தெளிப்பதற்கும் குடிதண்ணீரைப் பயன்படுத்துவதற்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் தடை விதித்திருக்கின்றன. தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்துக்கான தண்ணீர்ப் பயன்பாட்டுக்கும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இப்போதைக்குள் மழை பெய்யாவிட்டால் இன்னும் சில வாரங்களில் இந்த நிலை ஏற்பட்டுவிடும் என்று அரசு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒருவேளை மழை பெய்யாவிட்டால் குடிநீரை டேங்கர்களில் கொண்டுவருவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விடும். வறட்சிக் காலத்தில் இது மிகவும் செலவாகக் கூடிய ஒன்றாக இருக்கும். 2008 வறட்சியின்போதும் இவ்வாறுதான் தண்ணீர் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.