வார இறுதி விடுமுறை.. தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
வருகிற வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலிருந்தும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு எவ்வித இடையூறுமின்றிப் பயணம் செய்ய வசதியாகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஜூலை 10 (வெள்ளிக்கிழமை), ஜூலை 11 (சனிக்கிழமை) மற்றும் ஜூலை 12 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் பயணிகளின் வரத்து கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சென்னையின் முக்கியப் பேருந்து முனையங்களிலிருந்து பின்வருமாறு சிறப்புப் பேருந்துகள் திட்டமிடப்பட்டுள்ளன:

கிளாம்பாக்கம் முனையத்தில் இருந்து திருச்சி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு ஜூலை 10 (வெள்ளிக்கிழமை) அன்று 420 பேருந்துகளும், ஜூலை 11 (சனிக்கிழமை) அன்று 350 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.
கோயம்பேட்டிலிருந்து ஓசூர், பெங்களூரு, திருவண்ணாமலை, நாகை மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு ஜூலை 10 மற்றும் ஜூலை 11 ஆகிய இரு நாட்களிலும் தலா 55 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மாதவரம் முனையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் தினசரி 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை மட்டுமன்றிப் பிற முக்கியப் பொருளாதார நகரங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் பின்வருமாறு இயக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணிகளின் தேவைக்கேற்ப 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வார விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களுக்குத் தடையின்றித் திரும்பும் வகையில், ஜூலை 12 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் அனைத்து இடங்களிலிருந்தும் கூடுதலாக 445 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வார இறுதிப் பயணத்திற்காகத் தற்போது வரை வெள்ளிக்கிழமை அன்று 8,997 பயணிகளும், சனிக்கிழமை 3,143 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்ப 9,209 பயணிகளும் என ஆயிரக்கணக்கானோர் ஏற்கனவே தங்களது அரசுப் பேருந்துப் பயணத்தை முன்பதிவு செய்துள்ளனர்.
பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தொலைதூரப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in அல்லது TNSTC Mobile App வழியாகத் தங்களது பயணங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு அரசுப் போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. பேருந்து நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்கவும் போலீசார் சிறப்புப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
