விவசாயிகளுக்கு PM கிசான் தவணைத்தொகை ₹2,000 எப்போது கிடைக்கும்? - வெளியான மாஸ் அறிவிப்பு!

 
விவசாயி விவசாயி

இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்குக் காலாண்டு முதலீட்டு ஆதரவாக ஆண்டுதோறும் 6,000 ரூபாயை மத்திய அரசு வழங்கி வருகிறது. தலா ரூ.2,000 வீதம் 3 சம தவணைகளாக  நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இது செலுத்தப்படுகிறது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் அடுத்த முக்கியத் தவணையான 23-வது கிஸ்த் எப்போது வரும் என்று விவசாயிகள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இத்திட்டத்தின் வழக்கமான 4 மாத காலச் சுழற்சியின் அடிப்படையில், அடுத்த கட்ட நிதி விடுவிப்புக்கான தற்காலிகக் கால அட்டவணை கணிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டின் 22-வது தவணை நிதி கடந்த மார்ச் 13 அன்று அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடியால் முறைப்படி விடுவிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 9.32 கோடி விவசாயிகள் பயனடைந்தனர். ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலப்பகுதிக்கான 23-வது தவணைத் தொகை வரும் ஜூன் அல்லது ஜூலை மாத இறுதிக்குள் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான துல்லியமான தேதியை மத்திய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஜூன் முதல் வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது.

பி.எம். கிசான் விவசாயி

தவணைத் தொகை தடையின்றி வங்கிக் கணக்கிற்கு வந்து சேர, பயனாளிகள் பின்வரும் 3 கட்டாய வழிமுறைகளை நிறைவு செய்திருக்க வேண்டும் எனத் திட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. விவசாயிகள் தங்களது PM- கிசான் கணக்கிற்கு 'e-KYC' ஒப்புதலைக் கட்டாயம் முடித்திருக்க வேண்டும். இதனைப் பிரதமர் கிசான் இணையதளம் வாயிலாகவோ அல்லது அருகில் உள்ள பொதுச் சேவை மையங்கள் மூலமாகவோ பயோமெட்ரிக் முறையில் செய்துக் கொள்ளலாம்.

பயனாளியின் வங்கிச் சேமிப்புக் கணக்குடன் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் முறைப்படி இணைக்கப்பட்டிருக்க வேண்டும். விவசாயிகளின் நில விவரங்கள் மற்றும் வருவாய்த்துறைப் பதிவேடுகள் அந்தந்த மாநில அரசுகளின் தரவுத்தளத்தில் சரியாகப் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

விவசாயி

விவசாயிகள் தங்களது கணக்கிற்குப் பணம் வருமா என்பதைத் தற்போதே அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். PM-Kisan திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும் (pmkisan.gov.in). அதன் பின்னர் முகப்புப் பக்கத்தில் உள்ள 'Farmers Corner' பிரிவில் 'Know Your Status' (உங்கள் நிலவரத்தை அறியவும்) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும். உங்களது பதிவு எண் மற்றும் திரையில் தோன்றும் குறியீட்டு எண்களை  உள்ளிட்டு, 'Get Data' என்பதை அழுத்தவும்.

இதன் மூலம் உங்களது முந்தைய தவணை விவரங்கள் மற்றும் 23-வது தவணைக்கான ஒப்புதல் நிலைமைகளைத் துல்லியமாக அறிந்துகொள்ளலாம். தகுதியற்ற நபர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.