'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' அமலுக்கு வந்தது - யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரங்கள்!
தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ நேற்று முதல் மாநிலம் முழுவதும் முறைப்படி அமலுக்கு வந்துள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பிரசவித்த தாய்மார்களுக்கு உதவும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இப்புதிய நல்வாழ்வுத் திட்டத்திற்காக ஆண்டுக்கு ₹755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தங்கு தடையின்றி 1 கிராம் தங்க மோதிரத்தைப் பெறுவதற்கு அரசு சில முக்கியத் தகுதி வரம்புகளை நிர்ணயித்துள்ளது:
இத்திட்டம் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு, இங்கு நிரந்தரமாக வசித்து வரும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். தமிழக அரசின் கீழ் இயங்கும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு தாலுகா தலைமை மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெறும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த 1 கிராம் தங்க மோதிரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் எவ்வித பாகுபாடுமின்றி இந்த மோதிரம் வழங்கப்படும். பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பும் முன்னரே, அந்தந்த அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் மூலமாகவே இந்த 1 கிராம் தங்க மோதிரம் நேரடியாகத் தாய்மார்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும்.
இதற்காகத் தமிழகத்தின் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளைச் சுகாதாரத்துறை வழங்கியுள்ளது. முதலமைச்சரின் பிறந்தநாள் பரிசாக அறிவிக்கப்பட்டு, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ தமிழகப் பொதுமக்களிடையே, குறிப்பாக ஏழை எளிய குடும்பங்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
