“அக்காள் கணவருடன் உல்லாசமாக இருக்க முடியாது” - வருங்கால கணவரைக் கொடூரமாகக் கொன்ற இளம்பெண் கைது!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அக்காள் கணவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரை, காட்டுப்பகுதிக்கு வரவழைத்துக் கொடூரமாகக் கொலை செய்த இளம்பெண்ணையும் அவரது கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டம் ஜமுவா சௌக் பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ் (20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. ஊர்மிளாவிற்கு அவரது சகோதரியின் கணவரான சுபாஷ் பஸ்வான் என்பவருடன் நீண்ட நாட்களாகக் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
நீரஜைத் திருமணம் செய்து கொண்டால் அக்காள் கணவருடனான தொடர்பைத் தொடர முடியாது எனக் கருதிய ஊர்மிளா, சுபாஷ் பஸ்வானுடன் இணைந்து நீரஜைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். திட்டமிட்டபடி, ஊர்மிளா தனது வருங்கால கணவர் நீரஜை பீகார் எல்லைப் பகுதியிலுள்ள பேலா காட்டுப்பகுதிக்குத் தனியாக வருமாறு அழைத்துள்ளார்.

ஊர்மிளாவின் வார்த்தைகளை நம்பி காட்டுப்பகுதிக்கு வந்த நீரஜை, அங்கு ஏற்கனவே காத்திருந்த ஊர்மிளாவும் சுபாஷ் பஸ்வானும் இணைந்து கத்தியால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை அங்கேயே போட்டுவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். மகன் காணாமல் போனது குறித்து நீரஜின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், நீரஜின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர்.

அப்போது அவரது செல்போன் சிக்னல் கடைசியாகப் பேலா வனப்பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், அந்தச் சமயத்தில் ஊர்மிளாவின் செல்போன் சிக்னலும் அதே இடத்தில் இருந்தது போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஊர்மிளாவிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக ஊர்மிளா மற்றும் அவரது கள்ளக்காதலன் சுபாஷ் பஸ்வான் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
