மெட்ரோவில் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த நபர் - வசமாக சிக்க வைத்த பெண்கள்!

 
மெட்ரோ ரயில் புகைப்படம் ஆபாசம்

டெல்லியில் லோக் நாயக் பவன் மெட்ரோ நிலையத்திலிருந்து கிரீன் பார் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த ரயிலில் இரு பெண்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது நபர் ஒருவர், தங்களை ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக அந்த பெண்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சந்தேகமடைந்த பெண்கள் அந்த நபருடன் வாக்குவாதம் செய்து, அவரது மொபைல் போனை காட்டுமாறு கேட்டுள்ளனர்.

தான் வீடியோ எதுவும் எடுக்கவில்லை என மறுத்த அந்த நபர், அவர்களுக்கு முன்னாலேயே அவசர அவசரமாகத் தனது போனில் இருந்த சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் டெலிட் செய்துள்ளார். டெலிட் செய்த பிறகு, போனில் எதுவும் இல்லை எனக் கூறி அவர்களிடம் போனை காட்டியுள்ளார். ஆனால், சாதுரியமாக செயல்பட்ட அந்தப் பெண்கள், போனின் ரீசைக்கிள் பின்-ஐ சோதித்தபோது, தங்களை ரகசியமாக எடுத்த வீடியோ அங்கு இருந்ததை கண்டு பிடித்துள்ளனர்.

அந்த நபரை அந்த இரு பெண்கள் தட்டி கேட்கும் வீடியோ காட்சி உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரயிலில் சக பயணிகள் யாரும் அந்த நபரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததையும் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.