பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிக்க முயற்சி - தவெக நகரச் செயலாளர் கைது!
கரூர் மாவட்டம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்ற சம்பவத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நகரச் செயலாளர் நந்தகுமார் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் பகுதியில் பெண் ஒருவர் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பைக் ஒன்றில் மர்ம நபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் வைத்து அந்தப் பெண்ணை மறித்து, அவர் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறிக்க முயற்சி நடந்துள்ளது. பெண்ணின் கூச்சலால் அச்சமடைந்த அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்து மற்றும் குற்றச் சம்பவங்கள் நடந்த பகுதியின் சிசிடிவி கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்றது புகளூர் நகரத் தவெக செயலாளரான நந்தகுமார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
