மாதம் ரூ1000... ஆகஸ்ட் 1 முதல் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள்!!
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 20,765 ரேஷன் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, நியாய விலைக் கடை பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக விண்ணப்பங்களையும், டோக்கன்களையும் விநியோகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 5-ம் தேதி முதல் நடைபெறும் 2-ம் கட்ட முகாம்களுக்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவு சார் பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், வரும் ஒன்றாம் தேதி முதல் நான்கு தினங்களுக்குள் விண்ணப்பங்களை முழுமையாக விநியோகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கான 60 டோக்கன்களை ஒட்டுமொத்தமாக அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகம் செய்யாமல் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியாக பிரித்து டோக்கன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கன்களில் முகாம் நடைபெறும் நாள், நேரம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். நேரத்தைப் பொருத்தவரை, காலை அல்லது மதியம் என்று பொதுவாக குறிப்பிடுவதைத் தவிர்த்து, ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் நேரம் குறிப்பிடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு டோக்கன் விநியோகம் செய்யும்போது அப்பகுதியில் இறப்பு, வீட்டில் ஆள் இல்லாதவர்கள், விண்ணப்ப படிவம் வேண்டாம் என மறுப்பு தெரிவிப்பவர்களின் விவரங்களை அவ்வப்போது குறித்துவைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகாமிற்கு தேவையான அளவை விட கூடுதலாகவோ, குறைவாகவோ டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?