40 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி... விமான நிலையத்தில் பரபரப்பு!

 
விமான நிலையம்


 
தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணியில் ஒப்பந்த கூலித்தொழிலாளி ஈடுபடுத்தப்பட்ட நிலையில் அவர் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டு  மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக பலியானார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.    சென்னை விமான நிலைய வளாகப் பகுதிகளில் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யும் ஒப்பந்த பணியை, ஒரு தனியார் நிறுவனத்திடம் சென்னை விமானநிலைய நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.

ஆம்புலன்ஸ்

இதன்படி, சென்னை விமானநிலைய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தனியார் ஒப்பந்த நிறுவன கூலித்தொழிலாளர்கள் மின் அலங்காரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் டெர்மினல் 2 எனும் சர்வதேச விமான முனைய 2வது தளத்தின் மேல்பகுதியில்   அலங்கார மின்விளக்குகளை தொங்கவிடும் பணியில் திண்டிவனம் அருகே மரக்காணம் பகுதியைச் சேர்ந்த 26 வயது  செல்வம்  ஈடுபட்டிருந்தார்.
பிற்பகல் 2.30 மணிக்கு  2வது தளத்தின் மேல்பகுதியில் மின்விளக்குகளை செல்வம் தொங்க விடும்போது, திடீரென நிலைதடுமாறி சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம்  அடைந்த செல்வத்தை சக கூலித் தொழிலாளர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  

உத்தரபிரதேச போலீஸ்

அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட செல்வம் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கூலித் தொழிலாளர் செல்வம் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து சென்னை விமானநிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்விளக்கு அலங்காரப் பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவன நிர்வாகிகள் மற்றும் கூலித்தொழிலாளர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி  வருகின்றனர்.
இது போன்ற உயரமான கட்டிடங்களில் பணி செய்யும் தொழிலாளர்கள், பாதுகாப்பு கவசமாக தலையில் ஹெல்மெட் அணிய வேண்டும். அத்துடன்  மிக உயரமாக அந்தரத்தில் தொங்கியபடி வேலை செய்யும் தொழிலாளர்கள் சேப்டி பெல்ட் அணிந்து  அப்பகுதியை சுற்றிலும் வலைகள் கட்டியிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. எனினும், இதுபோன்ற எந்த விதிமுறையும் அமல்படுத்தாமல், சென்னை விமான நிலையத்தில் மின்விளக்கு அலங்காரப் பணிகளில் ஒப்பந்த கூலித் தொழிலாளர்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து  போலீசார் மற்றும் விமானநிலைய நிர்வாகத் தரப்பில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.