கடற்கரை பகுதியில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை.. போலீசார் விசாரணை!
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கடற்கரையில் குமரியை சேர்ந்த வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கூட்டப்புளியில் இருந்து கனகபுரத்திற்கு செல்லும் சாலையில் ஈத்தன்காடு கடற்கரை கிராமம் உள்ளது. இந்த கடற்கரையோரத்தில் நேற்று காலையில் கழுத்தில் பலத்த வெட்டுக்காயத்துடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ்குமார், பணகுடி இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த வாலிபர் சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார். அவரது கழுத்து, கை, கால், தலை ஆகிய இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. இதனால் அந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பதிவான மாயமானவர்கள் தொடர்பான வழக்கு விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

கொலை நடந்த பகுதியானது நெல்லை-குமரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளதால் அந்த வாலிபர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்தனர். அதில் கொலை செய்யப்பட்டவர் குமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியைச் சேர்ந்த கோபி மகன் ராஜ்குமார் (30) என்பது தெரியவந்தது. ஆனால், அவரை கொலை செய்த கும்பல் யார்?, எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கூடங்குளம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
