ஜாமீனில் வெளிவந்த இளைஞர்.. விற்ற மதுவுக்கு பணம் கேட்டதால் சரமாரியாக வெட்டி படுகொலை..!!

ஜாமீனில் வந்த வாலிபர் நள்ளிரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே, பரவை பேரூராட்சியில் உள்ள மீனாட்சி நகர் 5வது தெருவில் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சமயநல்லூர் போலீசாருக்கு நேற்று நள்ளிரவு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ‘கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் மதுரை தத்தனேரியைச் சேர்ந்த முத்துப்பழனி மகன் ராம்குமார் (25) என்பது தெரியவந்தது. இவர், ஏற்கனவே வாடிப்பட்டியில் பார் நடத்தி வந்துள்ளார். அதற்கான உரிமம் ரத்தான நிலையில் பரவையில் உள்ள மதுரை சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்று வந்துள்ளார். இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் சமயநல்லூர் போலீசார் கைது செய்திருந்த நிலையில், தற்போது ஜாமீனில் வெளி வந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் சுற்றிய இருவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இதில், ‘நேற்று நள்ளிரவு இருவரும் ராம்குமாரிடம் மது கேட்டதாகவும், அதற்கு அவர் பணம் கேட்கவே, இரண்டு நாட்கள் கழித்து தருவதாக கூறியதால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ராம்குமாரை கத்தியால் சரமாரி வெட்டிக் கொலை செய்ததும் தெரிய வந்தது. இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.