மின்சார பிரச்சனைகள் புகாருக்கு 24 மணி நேர தொலைபேசி எண்!
தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனை கட்டுப்படுத்த மே 31வரை தளர்வுகள் அற்ற ஊரடங்கை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மட்டுமல்ல தொடர்ந்து வரும் எல்லாக் காலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மின் கட்டமைப்பு மேலாண்மை, தடையில்லா மின் வழங்குதல், கூடுதல் மின்தேவை மற்றும் மின் உபகரணங்கள் பராமரிப்பு போன்றவை குறித்து விரிவாக அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கெரோனா சிகிச்சை மையங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகிய இடங்களுக்கு மின்வாரியம் மூலம் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார்.
தற்பொழுது கோடைமழை பெய்து வருவதால் மின்தேவைகள் கணிசமாக குறைந்துள்ளது, மேலும் கடந்த 6 மாத காலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத நிலையில், தற்போது காலமுறை பராமரிப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு தற்காலிக மின்தடை ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் காலமுறை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக பொது மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக செய்தி வெளியீடுகள் வெளியிடப்படவேண்டும் எனவும், சராசரி மின் இழப்புகளை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைளை பின்சார வாரியம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொது மக்களிடமிருந்து மின்தடை தொடர்பாக பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரி செய்வதற்கு ஏதுவாக அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். மேலும் பொது மக்கள் மின்தடை மற்றும் பழுது தொடர்பான புகார் விவரங்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
மின்தடை/பழுது நீக்கம் தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய தகவல் தெரிவிப்பதற்காக 94458-50811 என்ற வாட்ஸ்அப் எண் 24 மணி நேரமும் செயல்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
