மதுரை எம்.பி. சு. வெங்கடேசனை ஒருமையில் பேசியதற்கு கே.என். நேரு வருத்தம்!

 
மதுரை எம்.பி. சு. வெங்கடேசனை ஒருமையில் பேசியதற்கு  கே.என். நேரு வருத்தம்!

மதுரை எம்.பி. சு. வெங்கடேசனை ஒருமையில் பேசியது குறித்து கே. என். நேரு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இனி இது போன்று நிகழாது என்றும் கூறியுள்ளார்.

தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த புதன்கிழமையன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது குறித்தும், விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர். அதற்கு நேரு, ‘வெங்கடேசன்னு ஒரு ஆள் இருக்கான். அந்தாளுட்ட கேளுங்க’ என மதுரை எம்.பி. சு. வெங்கடேசனை ஒருமையில் பேசி பதிலளித்தார்.

இந்நிகழ்வு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷணன், கே. என். நேருவின் பேச்சு நாகரீகமற்றது என கூறி கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், சமூக ஊடகங்களில் பலரும் கே.என். நேருவுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் தனது செயலுக்கு கே.என். நேரு வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

From around the web