ரூ.4 கோடி விவகாரம்... நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு... பாஜகவினர் அதிர்ச்சி!
இன்று உயர்நீதிமன்றத்தில், ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்புவாதங்களையும் கேட்ட பின், திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் கார் டிரைவர் சதீஷ் மற்றும் உதவியாளர்களிடம் இருந்து ரூ.4 கோடியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கொண்டு செல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

அதன்படி ஏப்ரல் 22-ம் தேதி நயினார் உள்ளிட்டோர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ.4 கோடி பணம் சிக்கிய விவகாரத்தில் தொடர்புடைய நயினார் நாகேந்திரனை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், 'தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் பிடிபட்டது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரியுள்ளார்.
இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு,இந்த வழக்கை இன்று விசாரித்தது.
இருதரப்புவாதங்களையும் கேட்டபின், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
