புதிதாக பிறந்த 250 குழந்தைகளை விற்பனை செய்த கடத்தல் கும்பல்.. விசாரணையில் அதிர்ச்சி..!!
250 புதிதாகப் பிறந்த குழந்தைகளை விற்றதாக குழந்தை கடத்தல் கும்பல் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் குழந்தை விற்பனை மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான மகாலட்சுமி, கடந்த 2015-17-ம் ஆண்டு ஆடை உற்பத்தி செய்யும் ஆலையில் வேலை செய்து வந்தார். இவர் 8,000 ரூபாய் மாத சம்பளம் வாங்கி வந்துள்ளார். போதுமான சம்பளம் கிடைக்காததால் குழந்தை பெற விரும்பும் பெற்றோருக்கு கருமுட்டையை கொடுப்பதற்காக ரூ.20,000 அவர் பெற்றதாக கூறப்படுகிறது. அத்துடன் குழந்தை இல்லாத தம்பதிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு குழந்தைகளை விற்கத் தயராக இருக்கும் பெண்களிடம் இருந்து குழந்தையைப் பெற்றுத் தர மகாலட்சுமி முன் வந்துள்ளார். மேலும், அவர்களிடம் குழந்தைகளின் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இறுதியில் அவர் ஒரு நண்பரின் உதவியுடன் குழந்தை கடத்தல் தொழிலில் ஈடுபட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதனால் வீடு, கார் என வசதியாக மகாலட்சுமி மாறியுள்ளார். நவ.27-ம் தேதி ராஜாஜி நகரில் குழந்தையை விற்க முயன்ற கும்பலைச் சேர்ந்த 4 பேரை மத்தியக்குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இதுவரை 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். குழந்தை விற்பனை கும்பல் மூலம் ஆறு ஆண்டுகளில் 250 புதிதாகப் பிறந்த குழந்தைகளை விற்றதாக குழந்தை கடத்தல் கும்பல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளைத் திருடி, ஏழைத் தாய்மார்களைக் குழந்தைகளை விற்கச் சொல்லி வற்புறுத்திய இந்தக் கும்பல், கர்நாடகாவில் 60 பிறந்த குழந்தைகளையும், மற்ற குழந்தைகளைத் தமிழ்நாட்டிலும் விற்றதாகக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் விற்கப்பட்ட குழந்தைகளின் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். இதுவரை, இந்தக் குழுவால் விற்கப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களை அந்தக் குழு வெளிப்படுத்தியுள்ளது.