பற்றி எரியும் தொழிற்சாலை- 52 பேர் உயிரிழப்பு, பலர் காணவில்லை
வங்காள தேச தலைநகர் டாக்காவிலிருந்து தென்கிழக்கில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாராயண் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரூப்கஞ்சில் ஹசீம் ஜூஸ் தொழிற்சாலையின் ஆறு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் வியாழக்கிழமை மாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
6 தளம் கொண்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து தப்பிக்க மேல் தளங்கள் இருந்து கீழே குதித்த பலர் படுகாயமடைந்துள்ளனர், மேலும் பலர் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளனர்.
தீயை அணைக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். புகை மூட்டம் அதிகரித்துள்ளதால் மீட்பு பணியை தொடர்வதில் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு, கயிறு மூலம் கட்டிடத்தின் மேல்தளத்தை அடைந்து மீட்பு பணியை தொடங்கினர். மேல் தளத்தில் இருந்த 25 பேர் மீட்கப்பட்டனர்.
மேலும் இந்த விபத்தில் 12க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை காணவில்லை என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், இந்த விபத்திற்கான காரணம் தெரியவில்லை, இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.