பகீர் வீடியோ... அரசு மருத்துவமனை ஐசியூ வார்டுக்குள் மாந்திரீக சடங்குகள்!
குஜராத் மாநிலத்தில் அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் நோயாளி ஒருவரைப் பார்த்து மாந்திரீகம் செய்பவர், மாந்திரீக சடங்குகள் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதற்றத்தையும், கண்டனங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
மருத்துவமனையில் ஐசியு பிரிவில் நோயாளிகள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், நோயாளிகளை உறவினர்கள் பார்ப்பதற்கே அனுமதி வழங்குவதில் கெடுபிடிகள் விதிக்கப்படும் நிலையில், குஜராத் மாநில அகமதாபாத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் மாந்திரீகம் செய்பவர் ஒருவர் சடங்குகள் செய்துக் கொண்டிருந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.
மாந்திரீகம் செய்பவர் ஒருவர் அரசு பொது மருத்துவமனையின் நுழைவு வாயிலில் இருந்து ஐசியு வரை செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. மாந்திரீகம் செய்பவரிடம் உங்களால்தான் எங்களின் உறவினர் பிழைத்தார் என்று உறவினர்கள் பாராட்டும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுடன் பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி, “இது குறித்து முதற்கட்ட விசாரணையில் நோயாளியின் உறவினர் என்று கூறி மாந்திரீகவாதியை அழைத்துச் சென்றுள்ளனர். உறவினர்களுக்கு வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டை அவர் தவறாக பயன்படுத்தி ஐசியு பிரிவுக்குள் நுழைந்துள்ளார்.
நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க போடப்பட்டிருந்த திரைகளை விலக்கி சடங்குகளை செய்துள்ளனர். குறிப்பிட்ட அந்த நோயாளி இன்னமும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் உள்ளார். அவர் படிப்படியாக குணமடைந்து வருகிறார். மூட நம்பிக்கை முறையால் அவர் குணமடைந்தார் என்பது அர்த்தமற்றது.
இது குறித்து மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து முழுமையாக பரிசோதித்து வருகிறோம். எதிர்காலத்தில் இது போன்ற விதிமீறல்களை தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!