பரிசுத்த பரலோக மாதா ஆலய திருவிழா... 14ம் தேதி தேர் பவனி!
நாசரேத் அருகே பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 14ம் தேதி தேர் பவனி நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதா ஆலய 146வது ஆண்டு திருவிழா 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மன்னார்புரம் தென் மண்டல ஆர்.சி.பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமை வகித்து கொடியேற்றினார். பிரகாசபுரம் பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் வரவேற்றார். பெரியதாழை பங்குத்தந்தை சகேஷ் சந்தியா மறையுரை ஆற்றினார்.
கிழவநேரி பங்குத்தந்தை தோமாஸ், சோமநாதபேரி பங்குத்தந்தை கிங்ஸ்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பவனி, ஆராதனையில் திரளானோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இரவு புதியம்புத்தூர் கென்னடி இசைக்குழுவினரின் இசை சங்கமம் ஜாஸ் பேண்ட் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. 1ம் திருவிழா மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, கொடி பவனியும், மாலை 7 மணிக்கு திருக்கொடியேற்றம், மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. தினமும் காலை 5.40 மணிக்கு ஜெபமாலை பவனி, திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
14ம் தேதி (வியாழக்கிழமை) 9ம் திருவிழா மாலை 7 மணிக்கு திருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. கூத்தென்குழி தூய சவேரியார் கடல் சார் பயிற்சி நிறுவன நிர்வாக அதிகாரி மனோ தலைமை வகிக்கிறார். கூத்தென்குழி _ தோமையார்புரம் பங்குத்தந்தை சுசிலன் மறையுரை ஆற்றுகிறார். இரவு 11 மணிக்கு அன்னையின் அற்புத திருத்தேர் பவனியும், அதனை தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது.
15 ம் தேதி (வெள்ளிக்கிழமை) 10ம் திருவிழா அதிகாலை 3 மணிக்கு தேரடித்திருப்பலி மண்ணின் மைந்தர் மார்ட்டின் மனுவேல் தலைமையில் நடக்கிறது. காலை 8 மணிக்கு திருவிழா ஆடம்பரக்கூட்டுத்திருப்பலி மண்ணின் மைந்தர் ஒயிட் ராஜா தலைமையில் நடக்கிறது. தர்மபுரி மறைமாவட்ட அருட்பணி.அலெக்சிஸ் மறையுரை ஆற்றுகிறார். காலை 11 மணிக்கு அன்னையின் அற்புத திருத்தேர் பவனி நடக்கிறது.மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை பவனி தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை க்குரு ஜோசப் ரவிபாலன் தலைமையில் நடக்கிறது.
றி.கள்ளிக்குளம் தூய பனிமய அன்னை மெட்ரிக் பள்ளி தாளாளர் மணி மறையுரை ஆற்றுகிறார். தைலாபுரம் பங்குத்தந்தை ராபின் முன்னிலை வகிக்கிறார். இரவு 10 மணிக்கு விஜய் டிவி புகழ் மதுரை முத்து மற்றும் அன்னபாரதி குழுவினரின் பல் சுவை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதா ஆலய பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் தலைமையில் திருவிழாக் கமிட்டியார், அருட்சகோதரிகள், இறை மக்கள் செய்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!