undefined

ஆம்னி பேருந்தில் பாலியல் தொல்லை... செல்போனை  கொடுக்க முத்தம் கேட்ட கிளீனர்!

 


செல்போனை சார்ஜ் போட கொடுத்திருந்த நிலையில், செல்போனைத் திரும்ப கொடுப்பதற்காக 16 வயது சிறுமியிடம் முத்தம் கேட்டு ஆம்னி சொகுசுப் பேருந்தின் கிளீனர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. 

சொகுசுப் பேருந்தின் கிளீனரை சிறுமியின் குடும்பத்தினர் நடுரோட்டில் அரை நிர்வாணப்படுத்தி தாக்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களுருவில் வசித்து வரும் தம்பதியருக்கு இரு மகள்கள் இருக்கும் நிலையில், மூத்த மகள் ஹைதராபாத்தில் திருமணமாகி வசித்து வருகிறார். 

இதையடுத்து 16 வயதான இரண்டாவது மகள் அக்கா வீட்டுக்கு சென்றிருந்தாள். அங்கிருந்து நேற்று முன் தினம் இரவு தனியார் சொகுசு பேருந்தில் பெங்களூருவுக்கு புறப்பட்டார். ஐதராபாத்தில் இருந்து தனது தங்கையை சொகுசுப் பேருந்தில் ஏற்றி விட்டு அக்கா வீட்டிற்கு சென்ற நிலையில், சிறுமி மட்டும் தனியே ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு பேருந்தில் பயணித்துள்ளார். அந்த பேருந்தில் ஒருவர் டிரைவராகவும், மற்றொருவர் கிளீனர் மற்றும் பகுதி நேர டிரைவராகவும் இருந்துள்ளனர். கிளீனரிடமும், டிரைவரிடமும் தனது தங்கை தனியே பயணிப்பதாகவும், பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறும் அக்கா கூறியிருந்தார்.

சிறுமி தனியாக வருவதை அறிந்துகொண்ட கிளீனர் ஜன்னலில் உள்ள துணியை மூடும் போது சிறுமியின் உடலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  இது குறித்து செல்போனில் பெங்களூருவில் வசிக்கும் தாயாரிடம் சிறுமி கூறினாள். அதன்பிறகு, செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. இதையடுத்து பேருந்தை ஓட்டி வந்த டிரைவரிடம் செல்போனை சார்ஜ் போடுவதற்காக சிறுமி கொடுத்திருக்கிறாள். அதன்படி, டிரைவரும் சார்ஜ் போட்டுள்ளார். 

சிறிது நேரம் கழித்து சார்ஜ் ஆனதும் செல்போனை எடுக்க சிறுமி சென்ற போது, அங்கு வந்த கிளீனர், செல்போன் வேண்டும் என்றால், தனக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று பல முறை கூறி கட்டாயப்படுத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பின்னர் டிரைவரிடம் இருந்து செல்போனை வாங்கி சென்ற சிறுமி, நடந்த சம்பவங்கள் குறித்து தன்னுடைய அண்ணனிடம் செல்போனில் தகவல் தெரிவித்தாள். உடனே சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் பெங்களூரு சாளுக்கிய சர்க்கிளுக்கு திரண்டு வந்தனர். அங்கு தனியார் பேருந்து வந்ததும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிளீனரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் நடுரோட்டில் வைத்து அவரின் ஆடைகளை கிழித்து எறிந்து அரை நிர்வாணப்படுத்தினர்.

பொதுமக்கள் முன்னிலையில் சிறுமியின் குடும்பத்தினர்- உறவினர்கள் கிளீனருக்கு தர்ம-அடி கொடுத்தார்கள். இதில், அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் விதானசவுதா போலீசார் அங்கு விரைந்து சென்று கிளீனரை கைது செய்து விசாரித்தனர். அவர் பெயர் ஆரிப் கான் என்று தெரிந்தது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது.

இந்த சம்பவத்தின் போது டிரைவர் அமைதியாக இருந்ததாகவும், அவர் பேருந்து ஓட்டியதால் எதுவும் தெரியவில்லை என்றும், அவர் தான் தனது தங்கையின் செல்போனை சார்ஜ் போட்டு கொடுத்ததாகவும் சிறுமியின் அண்ணன் தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?