சபரிமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி... லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பணிகள் தொடங்கிய நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகளவில் குவிந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் சுமார் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் தரிசனம் செய்ததாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு எடக்குளம் பகுதியை சேர்ந்த 59 வயதான பெண் பக்தர் ஒருவர் தனது கணவர் மற்றும் பக்தர்குழுவுடன் சபரிமலை சென்றிருந்தார். பயண இடமான பம்பையிலிருந்து சன்னிதானம் நோக்கி பயணம் செய்யும் போது, அப்பாச்சி மேடு பகுதியில் கடும் கூட்ட நெரிசலில் பெண் பக்தை சிக்கினார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரது கணவரும், பிற பக்தர்களும் அவரை மீட்டு பம்பையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சபரிமலை பாதுகாப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் கூறுகையில், “தினசரி சராசரியாக 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்கிறார்கள். முதல் நாள் சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள், நெய்யபிஷேகம் முடிந்த பின்னரே மலை இறங்குவதால் கூட்டம் ஓரளவு குவிகிறது. தரிசனம் செய்தவர்கள் உடனே மலை இறங்கினால் கூட்டம் குறைய உதவும். தினசரி உடனடி தரிசனத்திற்கு அதிகபட்சம் 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க இயலும். எனவே முன்பதிவு செய்யப்பட்ட நாள் மற்றும் நேரத்துக்கு ஏற்ப பக்தர்கள் திட்டமிட்டு வருவது அவசியம்” என்று தெரிவித்தார்.
பக்தர்கள் தங்களது முன்பதிவு செய்யப்பட்டுள்ள தேதியை மாற்றிச் செல்லாமல், முன்பதிவு செய்யப்பட்ட நாள் மற்றும் நேரத்தை திறம்பட பின்பற்றுமாறு நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது. நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல், பாதுகாப்பான வழியில் பயணம் செய்வது முக்கியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க