ஒரே விமானத்தில் 113 பேர் தங்கம் கடத்தல் !! விமானநிலையத்தில் பரபரப்பு!!

மஸ்கட்டில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெருமளவு தங்கம், ஐபோன்கள், லேப்டாப்புகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் கடத்துவதாகவும் தகவல் வெளியாகின. இதனையடுத்து கண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டன. விமானத்தில் வந்த 186 பயணிகளையும் நிறுத்தி, பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அதில் 73 பேர், கடத்தல் விவகாரங்களில் ஈடுபடாதவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. மீதமிருந்த 113 பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.அதில் பயணிகள் தங்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள், தங்கப் பசைகள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தனர். சூட்கேஸ் மற்றும் பைகளில் ரகசிய அறைகள் வைத்து தைத்து அதில் 120 ஐபோன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள், வெளிநாட்டு சிகரெட்கள், லேப்டாப்புகளை மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
கடத்தல் தங்கம் 13கிலோ சிக்கியது. இந்த கடத்தல் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ14 கோடி எனத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பயணிகள் 113 பேர் மீதும், சுங்க சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த 113 பேரும் கடத்தல் குருவிகள். இவர்களை இயக்கும் கடத்தல் கும்பலின் தலைவர்கள் யார் என்பது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!