ஜட்ஜ் ஐயா.. என்னை அடிச்சிட்டாங்க! நீதிமன்றத்தில் கதறிய திருடன்!
நீதிமன்றத்தில், தன்னை பொதுமக்கள் தாக்கினார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த திருடன் கதறியதைத் தொடர்ந்து, தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் அருகே பெருமாள் குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுமரன். இவரது மனைவி ஜெயந்தி, அப்பகுதியில் உள்ள பொதுகுழாயில் தண்ணீர் பிடிக்க சென்ற போது அதே பகுதியை சேர்ந்த செல்வமுருகன் அவரை தாக்கி அணிந்திருந்த 11 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள், செல்வமுருகனை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதில் படுகாயம் அடைந்ததை செல்வமுருகனை, பொதுமக்களே மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் செல்வமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், செல்வமுருகனின் சொந்த ஊர் விளாத்திகுளம் அருகே வேம்பார் என்பதும், அவர் மீது கோவையில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், திருமணமாகி கடந்த 3 ஆண்டுகளாக பெருமாள்குளத்தில் இருந்து சந்தை வியாபாரத்துக்கு சென்று வருவதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செல்வமுருகன் உடல் நலம் தேறியதை அடுத்து, சாத்தான்குளம் போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். அதனைத் தொடரந்து செல்வமுருகனை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து என்னை கொடூரமாக தாக்கி காயப்படுத்தினர் என நீதிபதியிடம் புகார் அளித்தார்.
அதையடுத்து, செல்வமுருகன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் பெருமாள்குளத்தைச் சேர்ந்த 8 பேர் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!