நெகிழ்ச்சி... நிலச்சரிவில் தாயை இழந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் இளம்பெண்!

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு விபத்தில் தாயை இழந்த குழந்தைகளுக்கு, இடுக்கியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் தனது கைக்குழந்தையுடன் சென்று, அங்கேயே தங்கியிருந்து தாய்ப்பால் கொடுத்து வரும் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதை முன் உதாரணமாக கொண்டு பலரும் தற்போது தாய்ப்பால் கொடுக்க முன்வந்துள்ளனர்.
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள உப்புதரை பகுதியைச் சேர்ந்தவர் சஜின் (35), விவசாயி. இவரது மனைவி பாவனா (30). இவர்களுக்கு பெண், ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். வயநாடு நிலச்சரிவில் 317 பேர் இறந்த நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தாயை இழந்து பசியில் தவித்து வரும் கைக்குழந்தைகளின் நிலை குறித்து ஊடகங்கள் மூலம் அறிந்த பாவனா வேதனையடைந்தார். நிலச்சரிவில் தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடிவு செய்தார்.
இது குறித்து தனது கணவரிடம் கேட்டு, அவரது சம்மதத்தையும் பெற்றவர், 'வயநாட்டில் தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வேண்டும் என்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்' என தனது செல்போன் எண்ணை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதைப் பார்த்து வயநாட்டில் உள்ள முகாமில் இருந்து பாவனாவிற்கு உடனடியாக அழைப்பு வந்தது. இதையடுத்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் வயநாடு முகாமிற்கு சென்ற பாவனா, அங்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து வருகிறார். பாவனாவின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும், திருமணமான பல பெண்கள், தாயில்லாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தற்போது முன்வந்துள்ளனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா