வாய்க்காலில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி... பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பெரும் சோகம்!
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கொட்டக்கொம்பைக் கிராமத்தில் வசித்து வருபவர் 30 வயது தமிழ்ச்செல்வன். கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் தமிழ்ச்செல்வன் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகச் சகோதரர் ராஜ்குமார் மற்றும் நண்பர்கள் சுதன், கார்த்திக்குடன் இணைந்து பவானிசாகர் அணைக்கு வந்திருந்தார். இதனையடுத்து கீழ்பவானி வாய்க்கால் நீரில் தமிழ்செல்வன் மற்றும் சுதன் இருவரும் இறங்கிக் குளிக்க தொடங்கினர்.
பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் சுமார் 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இருபுறக் கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்லும் நிலையில், குளிப்பதற்காக இருவரும் வாய்க்கால் நீரில் இறங்கி மாயமாகினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர், நீரில் மூழ்கி மாயமான சுதனை உடனடியாக உயிருடன் மீட்டனர். நீண்ட நேரம் தேடியும் தமிழ்ச்செல்வனை மீட்க முடியாததால் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், நீரில் மூழ்கிய தமிழ்ச்செல்வனை தீவிரமாகத் தேடினர். தமிழ்ச்செல்வனின் உடல், சம்பவ இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மிதந்ததைக் கண்டு தீயணைப்புத் துறையினர், அவரது உடலை மீட்டனர். அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்தநாளைக் கொண்டாட நண்பர்களுடன் வந்த இளைஞர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!