அனைத்து அருவிகளும் மூழ்கியது... காவிரி ஆற்றில் நீர்வரத்து 77,000 கனஅடியாக அதிகரிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 77,000 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அனைத்து அருவிகளும் முழுமையாக தண்ணீரில் மூழ்கின.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து, உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 56 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை 6 மணி அளவில் 74 ஆயிரம் கனஅடியாக உயர்ந்த நீர்வரத்து, மாலை 6 மணி அளவில் விநாடிக்கு 77 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், பிரதான அருவி, சினி ஃபால்ஸ், ஐந்தருவி ஆகியஅருவிகள் முழுமையாக தண்ணீரில் மூழ்கின. பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்து, 3 அடி உயரத்தைக் கடந்து தண்ணீர் பாய்கிறது.
வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் முதல் நாகமரை வரையிலான தருமபுரி மாவட்ட காவிரிக் கரையோர பகுதிகளை வருவாய், வனம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், தாழ்வானப் பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று மாலையில் நீர்வரத்து 76,794 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 77.36 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்இருப்பு39.37 டிஎம்சி-யாக உள்ளது. காவிரிக் கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா