சாலையில் திடீரென மயங்கி சரிந்த யானை... தாயை சுற்றிச் சுற்றி வரும் குட்டியானை!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகம். சமீபகாலமாக இப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி சாலையை கடந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன.
இந்நிலையில், நேற்று மார்ச் 3ம் தேதி பண்ணாரி கோவிலிலிருந்து பவானிசாகர் செல்லும் சாலையில், குட்டியுடன் வந்த தாய் யானை திடீரென மயங்கி விழுந்துவிட்டது. மயங்கிய நிலையில் கிடந்த தாய் யானை அருகே குட்டி யானை பரிதாபமாக அங்குமிங்கும் சுற்றிச்சுற்றி வந்தது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் தாய் யானையின் உடல்நிலையை ஆய்வு செய்தனர்.
அப்போது, யானையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்ததை அடுத்து முதலுதவிக்கு உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது. வனக்கால்நடை மருத்துவர் சதாசிவம், பாதிக்கப்பட்ட 40 வயது தாய் யானைக்கு குளுக்கோஸ் செலுத்தி சிகிச்சை அளித்தார். மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் யானையை பெல்ட்டால் கட்டி தூக்கி நிறுத்தி, அதனை நடக்க வைக்க முயற்சித்தனர். யானையால் நிற்கக்கூட முடியாமல் சோர்வுடன் படுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து அதே இடத்தில் யானைக்கு பசுந்தழைகள் தீவனமாக அளித்து, தொடர்ந்து குளுக்கோஸ் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. குட்டி யானை தாய் யானை அருகே வருவதை கட்டுப்படுத்த, அதை தனியாக பிரித்து பெரிய அகழி அமைத்து, குட்டி யானை மேலே ஏறாதபடி பிடித்து வைத்தனர்.
குட்டி யானைக்கு பாலுடன் லாக்டோஜன் கரைத்து கொடுத்து அதனை தூங்கச் செய்தனர். இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் , "சிகிச்சை பெற்று வரும் தாய் யானையின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சிகிச்சை பலனின்றி தாய் யானை இறந்துவிட்டால், குட்டியை மற்ற யானைகளுடன் சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படும். அல்லது குட்டி யானையை முதுமலை யானைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!