முன்னாள் எம்.எல்.ஏ.மீது கம்பு, இரும்புக்கம்பியால் தாக்குதல்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் அதிமுக எம்எல்ஏ ஆர்.சுந்தர்ராஜ். இவர், அமமுகவில் இணைந்ததால் தனது எம்எல்ஏ பதவியை இழந்தார். இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது அமமுகவில் மாநில நிர்வாகியாக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கல் குவாரி ஓட்டப்பிடாரம் – பாளையங்கோட்டை சாலையில் செயல்பட்டு வந்தது. தற்போது அனுமதி காலம் முடிந்ததால் குவாரி செயல்படவில்லை. அங்கு தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
தனியார் காற்றாலை நிறுவனம் ஒன்று ஓட்டப்பிடாரத்தில் சுந்தர்ராஜுக்கு சொந்தமான தோட்டம், அங்குள்ள பொதுப்பாதை மற்றும் நீர்வழிப் பாதைகளை ஆக்கிரமித்து மின்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. மின்பாதை அமைக்கும் பணியில் அந்த தனியார் காற்றாலை நிறுவனம் ஈடுபட்டு வந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார். காற்றாலை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களாக காற்றாலை நிறுவனம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. சுந்தர்ராஜ், பணிகளை நிறுத்தச்சொல்லி கூறினார். ஆனால் அங்கு பணியில் இருந்த பொறியாளர்கள், தொழிலாளர்கள் மறுத்து விட்டனர். அத்துடன் அவரை கீழே தள்ளி கம்பு, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஓட்டப்பிடாரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனியார் காற்றாலை நிறுவனத்தை சேர்ந்த ஹரி மாஜி எம்எல்ஏ சுந்தர்ராஜ் தரப்பினர் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார். அத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னாள் எம்எல்ஏ தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!