மறைந்தவர் கோடி... மக்கள் மனதில் நிற்கும் கேப்டன் நினைவலைகள்!
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு இதே நேரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவுச் செய்தியை தாங்க முடியாத மக்கள் சென்னை தீவுத் திடல் பகுதிக்கு தொண்டர்கள் பிரபலங்கள் என கூட்டம், கூட்டமாக சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு தினமும் வருகின்ற அனைவருக்கும் சமபந்தி உணவு வழங்கப்படுகிறது.
விஜயகாந்த் மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் விஜயராஜ் . சினிமா மீதான ஆர்வத்தால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்தார்.
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 1979ல் ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் வில்லனாகவே அறிமுகமானார். 1980ல் தூரத்து இடிமுழக்கம் எனும் படத்தின் மூலம் ஹீரோவானார்.
1981ல் ‘சட்டம் ஒரு இருட்டறை’ என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவில் கமர்சியல் ஹீரோவாக அடியெடுத்து வைத்தார். 2015 வரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1984ல் மட்டும், ஒரே ஆண்டில் 18 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தார். விஜயகாந்தின் 100வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’, அதிக வசூலை குவித்து வெள்ளி விழா சாதனைப் படைத்தது. இந்த சாதனையை அப்போது முன்னோடியாக இருந்த ரஜினி, கமல் கூட செய்ய முடியவில்லை. இந்த ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு தான் அவருக்கு ‘கேப்டன்’ என்ற பட்டத்தை ரசிகர்கள் கொடுத்தனர்.
1999ல் நடிகர் சங்கத் தலைவரான கேப்டன் விஜயகாந்த், சங்கத்தின் முழு கடனையும் சிங்கப்பூர், மலேசியாவில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். அதே போல் சினிமாவில் நலிவடைந்த கலைஞர்களுக்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.
14, செப்டம்பர் 2005ல் தேமுதிக கட்சியை தொடங்கிய விஜயகாந்த் 4 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டார். 2006ல் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட்டு, விஜயகாந்த் மட்டுமே விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் தேமுதிக கட்சி சார்பில் வெற்றி பெற்றார். அடுத்து அதிமுக கூட்டணியுடன் 2011 தேர்தலை எதிர்கொண்டு 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களை வென்று தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சியாக அமர்ந்தார். விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2016ல் மக்கள் நல கூட்டணி சார்பாக 104 தொகுதியில் போட்டியிட்டும் , 2021ல் மக்கள் நீதி மையம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுடன் 60 தொகுதிகளில் போட்டியிட்டும் தேமுதிக கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
1994 – தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர் விருது, 2001 – தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, அதே ஆண்டில் சிறந்த இந்திய குடிமகனுக்கான விருது, 2009 – தமிழ் சினிமாவில் சிறந்த 10 நடிகருக்கான Filmfare விருது பெற்றார். 2011-ம் ஆண்டு சர்வதேச சர்ச் மேலாண்மை நிறுவனத்தின் கௌரவ டாக்டர் பட்டம் செந்தூர பூவே படத்திற்காக பெற்று கொண்டார். தாயகம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது, சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் 4, Filmfare விருது 1 என பல விருதுகளை குவித்து சாதனை படைத்துள்ளார். அவரது மறைவுக்கு பிறகு கேப்டனுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!