தொண்டர்கள் அதிர்ச்சி... காங்கிரஸ் மாவட்ட தலைவர் கார் மோதி பலி.. கே.எஸ். அழகிரி இரங்கல்!!
தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் கலந்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி உட்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்களுடன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாகராஜ், நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது விபத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ நாகராஜ் காங்கிரஸ் கட்சி கருத்தரங்கில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, உணவகத்தில் உணவு அருந்திவிட்டு சாலை அருகில் நின்றுகொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரை எதிர்பாராத விதமாக கார் மோதியதில் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தொடர்ந்து 5 மணி நேரம் நடைபெற்ற கருத்தரங்கில் நாகராஜ் அரங்கத்தின் கீழே அமர்ந்திருந்ததை பார்த்து மேடையில் வந்து அமருங்கள் என பலமுறை கூறியும் மறுத்துவிட்டார். அன்று இரவே விபத்தில் காலமான செய்தி எனது நெஞ்சை உலுக்கியது.
அவரது குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும் எப்படிஆறுதல் கூறுவதெனத் தெரியவில்லை. கட்சியின் செயல்வீரராக நம்மிடையே இருந்த ஒருவரை இழந்துவிட்டோம்.
திரு அளவூர் நாகராஜ் அவர்களது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கல்களும், அனுதாபங்களும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...