நடிகை நயன்தாராவுக்கு இயக்குநர் வெற்றிமாறன் ஆதரவு... கண்டுகொள்ளாத நடிகர் சங்கம்!
மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பிற மொழிகளில் எல்லாம் நடிகர் சங்கம் வலுவாக செயல்பட்டு வருகிறது. இவ்வளவு ஏன்... இந்த மொழிகளின் திரைப்படங்களுடன் அதிகளவில் வசூலில் போட்டியிடாத போஜ்புரி, ஒரியா போன்ற மொழிகளில் கூட நடிகர் சங்கம் நடிகர், நடிகைகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. தமிழில் மட்டுமே நடிகர் சங்கம், பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு நலிந்த கலைஞர்களுக்கு உதவி பொருட்களைத் தருகிற புகைப்படங்கள் குறித்த செய்திகளை வெளியிடும் சங்கமாக இருந்து வருவதாக பலரும் தங்களது ஆதங்கங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் மரணத்தில் நடிகர் சங்கத்தின் செயல்பாடு திரையுலகத்தினரைத் தாண்டு, தமிழக மக்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்த் இருந்த போது, செயல்பட்ட விதம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்தின் போது விஜயகாந்த் செயல்பட்ட விதம் எல்லாம் வீடியோக்களாக ஒளிப்பரப்பாகி மக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆனால், நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் கார்த்தி, விஷால் என முன்னின்று செய்ய வேண்டிய யாருமே எட்டிக் கூடப் பார்க்கவில்லை. சரி.. இவர்களிடம் போன் கூடவா இல்லை. இவர்களால் வரமுடியவில்லையெனில் வேறு யாரிடமாவது சொல்லி, அவரது இறுதி ஊர்வலத்தை மொத்த நடிகர், நடிகைகளையும் திரட்டி அஞ்சலி செலுத்தியிருக்க கூடாவா இவங்களுக்கு தோன்றவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்நிலையில், நடிகை நயன்தாராவின் படத்திற்கு தடை விதிப்பது குறித்தும், ஓடிடி தளத்தில் இருந்தும் நீக்கப்படுவது குறித்தும் நடிகர் சங்கம் எந்த வார்த்தையையும் உதிர்க்காத நிலையில், இது தவறு என்று இயக்குநர் வெற்றிமாறன் ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும், மறுப்பதற்கும் தணிக்கைக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று தன்னுடைய குரலை முதல் குரலாக பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவின் 75வது படமான 'அன்னபூரணி' திரைப்படம் டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ் மற்றும் ரெட்டின் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குநர் படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து சமீபத்தில் இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்து மதத்தின் புனிதங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சிவசேனா பிரமுகர் ரமேஷ் சோலான்கி என்பவர் மும்பையில் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்டுடியோஸ் வருத்தம் தெரிவித்து சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்கவுள்ளதாகவும், அதுவரை படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்படும் எனவும் அறிவித்தது. சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை இப்படி மிரட்டி ஓடிடி தளத்தில் இருந்து நீக்குவது கண்டனத்துக்குரியது என குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஒரு படத்தை அனுமதிப்பதற்கும் தடை செய்வதற்கும் சென்சார் போர்டுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகளே தணிக்கைக் குழுவின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் என அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என எதுவும் இல்லை எனவும் இது ஓடிடிகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை அழுத்தம் கொடுத்து ஓடிடியில் இருந்தே நீக்கவைப்பது திரைத்துறைக்கே நல்லதல்ல என தெரிவித்துள்ள அவர், இத்தகைய நிகழ்வுகளே தணிக்கைக் குழுவின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் எனவும் கவலை தெரிவித்துள்ளார்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!