‘வேற யாரை கல்யாணம் பண்ணாலும் வெட்டுவேன்’ மிரட்டிய காதலன்... தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்!
‘வேறு யாரைத் திருமணம் செய்து கொண்டாலும் கொலை செய்து விடுவேன்’ என்று காதலன் மிரட்டிய நிலையில், காதலனையும் திருமணம் செய்து கொள்ள முடியாமல், நிச்சயிக்கப்பட்டவனுக்கும் கழுத்தை நீட்ட முடியாமல், 19 வயது இளம்பெண் தூக்கில் தொங்கி தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள ஆனேக்கல் தாலுகா ஜிகானி பகுதியை சேர்ந்தவர்கள் மீனா - யோகேஷ் தம்பதி. இவர்களது மகள் சந்திரகலா (19) படித்து முடித்து விட்டு, வீட்டில் இருந்து வந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் அருண் என்பவரும் காதலில் விழுந்தார்.
இவர்களது காதலுக்கு அருணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே சந்திரகலாவின் பெற்றோர் அருண் வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேசினர். இதை ஏற்க மறுத்த அருணின் குடும்பத்தினர், சந்திரகலாவின் பெற்றோரை அவதூறாக பேசி திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து சந்திரகலாவை திருமணம் செய்ய அருண் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அருண் சிறைக்கு சென்று விட்டதாகவும், அவரது செயல்பாடுகள் சரியில்லை என்றும் சந்திரகலாவுக்கு அவரது பெற்றோர் அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் மனம் மாறிய சந்திரகலா உறவினர் இளைஞருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
இதையறிந்த அருண், சந்திரகலாவை சந்தித்து, வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சந்திரகலா தனது பாட்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் சந்திரகலாவின் குடும்பத்தினர் கோணனகுண்டே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்திரகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், சந்திரகலாவின் பெற்றோர் ஜிகானி காவல் நிலையத்தில் தங்கள் மகளுக்கு அருண் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அருண் என்பவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!