மனைவியை அடித்தே கொன்ற கணவன்... குழந்தைகளை அனாதையாக்கி... தானும் தற்கொலை!

 
ரகுநாதன்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடி போதையில், தன்னுடைய மனைவியை கட்டையால் அடித்தே கொன்ற கணவன், பயந்து தானும் தற்கொலை செய்து கொண்டு குழந்தைகளை அனாதையாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்துள்ள கோழித்துறையைச் சேர்ந்தவர் ரகுநாதன் (40). கூலித்தொழிலாளியான இவரின் மனைவி ராணி (35). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குடிபழக்கத்திற்கு அடிமையான ரகுநாதன், தினந்தோறும் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது தொடர்ந்தது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற ரகுநாதன் இரவில் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை பார்த்த அவரது மனைவி கண்டித்தார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை. அவரது மகள் ஏன் தினமும் குடித்து விட்டு வருகிறீர்கள் என கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரகுநாதன், மகளை அங்குள்ள அறையில் பூட்டி வைத்து தாக்கினர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இதை பார்த்து அதிர்ச்சியான ராணி கதவை திறந்து மகளை காப்பாற்றினார். பின்னர் மகன்களையும், மகளையும் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். கடும் கோபம் கொண்ட ரகுநாதன் தனது மனைவியையும் சரமாரியாக தாக்கினார். ஆத்திரம் தீராத அவர் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து ராணியின் தலை மற்றும் உடல் முழுவதும் தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.

பின்னர் ரகுநாதனும் குடிபோதையில் அப்படியே படுத்து விட்டார். சில மணி நேரங்கள் கழித்து போதை தெளிந்து எழுந்த அவர், மனைவி இறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். மனைவியை அடித்து கொன்று விட்டோமே என்றும், போலீசார் எப்படியும் தன்னை விசாரிப்பார்கள் என்ற பயத்திலும் இருந்த ரகுநாதன் அதிகாலையில், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Kotagiri PS

இன்று காலை வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்து கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்தவர்கள், ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் ராணி இறந்த நிலையிலும், ரகுநாதன் தூக்கில் பிணமாகவும் தொங்கி கொண்டிருந்தனர்.

இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web