மிரட்டும் புதிய வகை கொரோனா... உலக நாடுகள் அதிர்ச்சி!!
2019ல் சீனாவின் வூகாண் மாகாணத்தில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அந்த வகையில் கொரோனாவிற்கு 69லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 69 கோடிக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் அடுத்தடுத்து மாறுபாடு அடைந்து புதிய வகை வைரசாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை தாக்கி வருகிறது. கொரோனாவின் வீரியம் சமீப காலமாக குறைந்து இருக்கும் நிலையில், புதிய வகை கொரோனா ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ள இந்த வைரசுக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த வைரசின் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி.) தெரிவித்து உள்ளது. இது குறித்து அந்த மையம் தனது டுவிட்டர் தளத்தில், 'கொரோனாவை ஏற்படுத்தும் வைரசின் புதிய வகை ஒன்றை சி.டி.சி. கண்காணித்து வருகிறது. இந்த வகைக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது. அமெரிக்கா, டென்மார்க் மற்றும் இஸ்ரேலில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வைரஸ் தொடர்பாக உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. குஜராத் தலைநகர் காந்திநகரில் நேற்று தொடங்கிய ஜி20 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் "சுகாதாரம் ஆபத்தில் இருக்கும்போது, அனைத்து அம்சங்களும் ஆபத்தை எதிர்கொள்ளும் என்ற முக்கியமான பாடத்தை கொரோனா நமக்கு கற்றுத்தந்தது. வலி நிறைந்த இந்த பாடத்தை கொரோனா தொற்று காலத்தில் உலகம் அறிந்து கொண்டது.
தற்போதைய நிலையில் கொரோனா உலகளாவிய சுகாதார அவசர நிலையாக இல்லை. ஆனாலும் சுகாதார அச்சுறுத்தலாகவே தற்போதும் நீடித்து வருகிறது. ஏனெனில் ஏராளமான பிறழ்வுகளுடன் கூடிய கொரோனாவின் மாறுபாடு வைரஸ் ஒன்றை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வகைப்படுத்தியுள்ளது. பிஏ.2.86 என்ற அந்த மாறுபாடு தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து நாடுகளும் கண்காணிப்பை தொடர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், தொற்றுநோய் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் என அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொள்கிறேன். தொற்றுநோய் ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சுகாதார விதிமுறைகளில் திருத்தங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் உள்ளன.
டிஜிட்டல் சுகாதாரம் குறித்த உலகளாவிய முன்முயற்சியை மேம்படுத்துவதில் இந்தியா மற்றும் அனைத்து ஜி20 நாடுகளுக்கும் நன்றி. இது டிஜிட்டல் சுகாதாரத்துக்கான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய வியூகங்களை ஆதரிக்கிறது. உலகளாவிய டிஜிட்டல் சுகாதார சான்றிதழ் நெட்வொர்க் உட்பட பிற முயற்சிகளையும் வலுப்படுத்தும்" என உலக சுகாதார அமைப்பு இயக்குனர் தெரிவித்தார்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!