பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு... பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பஞ்சலிங்க அருவி பகுதிகளுக்குச் செல்ல பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் நிலையில், திருப்பூர், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். விடுமுறை நாட்களில் இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும்.

வெளிமாநிலங்களில் இருந்தும் பஞ்ச லிங்க அருவியில் குளிப்பதற்காகவும், அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசிப்பதற்காகவும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்படும். இந்நிலையில், கடந்த இருதினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் பாலாற்றில் ஆர்பரித்தப்படியே பாய்ந்து செல்கிறது. திருமூர்த்தி மலையடிவாரத்தில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுற்றி ஓடும் பாலாற்றில் தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல செல்வதால், பக்தர்கள் பாலாற்றில் குளிப்பதற்கோ, துவைப்பதற்கோ இறங்கக்கூடாது என கோயில் நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழும் நிலை உள்ளதால் கோயில் நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது. கோவை மாவட்டம் ஆழியார் அருகே உள்ள கவியருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் இந்த பகுதிகளில் அருவியில் குளித்து மகிழ்வதற்காக வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
