வெற்றிகள் குவிய புரட்டாசி சனிக்கிழமை விரதம்!
இந்த நாட்களில் விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் நீடித்த செல்வத்தை பெறுவர் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு. புரட்டாசி மாதத்தில் வரும் ஏதாவது ஒரு சனிக்கிழமையில் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். குறிப்பிட்ட சனிக்கிழமையில் அதிகாலையில் எழுந்து வீடு சுத்தம் செய்து, குளித்து, பூஜை சாமான்கள் சுத்தம் செய்திட வேண்டும்.
கலசத்தில் நாமமிட்டு துளசி மாலை சுற்ற வேண்டும். இந்த சொம்பில் வீடு வீடாக சென்று படையல் போட தளுகைக்கு அரிசி கேட்க வேண்டும். இப்படி செய்வதால் நமது ஆணவம் அழியும் என்பது நம்பிக்கை. அப்படிக் கொண்டு வரும் அரிசி மற்றும் பணத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும். இதே அரிசியில் நைவேத்தியங்கள் படைக்கலாம்.

வாழை இலையில் புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல், பாயாசம் வைக்கலாம். மேலும் சிலர் சாதம், குழம்பு, கூட்டு, பொரியல், அப்பளம், வடை, பாயாசம் என்று படையல் இடுவதும் வழக்கம். நைவேத்தியம் படைத்து பெருமாளுக்கு 9 அல்லது 11 எண்ணிக்கையில் வடை மாலை சாற்றலாம்.
துளசி தீர்த்தம் வைக்கும் பஞ்ச பாத்திரத்தில் சிறிது பச்சை கற்பூரம், துளசி சேர்க்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காயும் இடம் பெறுவது அவசியம் . புரட்டாசி பூஜையில் மாவிளக்கு ஏற்றுவது விசேஷம். தேங்காய் உடைத்து, மாவிளக்கேற்றி, தூப தீபங்கள் காண்பித்து, சாம்பிராணி , கற்பூர ஆரத்தியை படையல் முழுவதுமாக சுற்றி எடுக்க வேண்டும். கோவிந்தா.. கோவிந்தா.. நாமம் எழுப்பி பெருமாளை வழிபட வேண்டும்.

இந்த விரதத்தை முடிக்கும் வரை உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருப்பது நலம். சனிக்கிழமைகளில் மதியம் 1.30 மணியில் இருந்து 3 மணி வரை எமகண்டம். இதனால் 1.30 மணிக்குள்ளாக பூஜையை முடித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இது தவிர மாவிளக்கு இடுவதும் சிறப்பான பலன்களைத் தரும் என்பது ஐதிகம். காக்கைக்கு உணவு வைத்த பிறகே விரதத்தை முடிக்க வேண்டும். இந்த முறையில் சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்க பெருமாளின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெறலாம். சகல செல்வங்களும் நீடித்து நிலைத்து நிற்கும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
