ஆர்.கே.செல்வமணி திடீர் விலகல்... இயக்குநர்கள் சங்கத் தலைவரானார் ஆர்.வி.உதயகுமார்!
இயக்குநர் சங்க தேர்தலில் பழைய நிர்வாகிகளை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வராததால், செயலாளராக இருந்த ஆர்.வி.உதயகுமார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொருளாளராக இருந்த பேரரசுவை செயலாளராகவும், பொருளாளர் பதவிக்கு இயக்குநர் சரணை புதிதாகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, வரும் மார்ச் 16 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டனர். இதில், ஆர்.கே.செல்வமணி தலைமையிலான அணி வெற்றி பெற்றது. ஆர்.கே.செல்வமணி சங்கத்தின் தலைவர் பதவிக்கும், ஆர்.வி.உதயகுமார் செயலாளர் பதவிக்கும், பேரரசு பொருளாளர் பதவிக்கும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என்று ஆர்.கே.செல்வமணி அறிவித்திருந்ததால், தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. புதிதாக யாரும் போட்டியிட முன்வராததால், செயலாளராக இருந்த ஆர்.வி.உதயகுமாரை தலைவராகவும், பொருளாளராக இருந்த பேரரசுவை செயலாளராகவும், பொருளாளர் பதவிக்கு இயக்குநர் சரணை புதிதாகவும் போட்டியின்றி தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மீதியிருக்கும் துணைத்தலைவர், துணைச்செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு மட்டும் வரும் 16 ம் தேதி தேர்தல் நடைபெறும். 2600 உறுப்பினர்களைக் கொண்ட இயக்குநர்கள் சங்கத்தில் இரண்டாயிரம் பேர் வாக்களிக்கும் உரிமைப் பெற்றவர்கள். இவர்களில் உதவி இயக்குநர்களும் அடக்கம். படம் ஒரு படத்தையாவது இயக்கி இருப்பவர்கள் மட்டுமே தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்குப் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!