வெள்ள நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000!? தமிழக அரசின் முக்கிய முடிவு!
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 4 மாவட்டங்களை புரட்டி போட்டு விட்டு கடந்து சென்றிருக்கிறது மிக்ஜாம் புயல். இந்நிலையில், இந்நான்கு மாவட்டங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக இரு தவணைகளில் தலா 5,000 ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புயல் கரையைக் கடந்து 5 நாட்களாகியும் இன்னமும் பல இடங்களில் வெள்ளநீர் முழுவதுமாக வடியவில்லை. தலைநகரான சென்னையிலேயே இந்த நிலைமை எனும் போது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் எல்லாம் நிலைமை இன்னும் மோசமாக இருகிறது. பல இடங்களில் அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் போய் உதவி செய்ய கூட முடியாத அளவில் இருந்ததால், ஹெலிகாப்டர் மூலமாக உணவு வழங்கப்பட்டது.
வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருள்கள் பழுதாகின. மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கின.
இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்படைந்துள்ளனர். வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். முதற்கட்டமாக 5,060 கோடி ரூபாய் பணம் கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். பேரிடர் நிவாரண நிதி மூலம் 450 கோடி ரூபாயை விடுவித்த ஒன்றிய அரசு, சென்னை வெள்ள மேலாண்மை திட்டம் மூலம் 561.29 கோடி ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு வழங்கும் நிவாரணத்தை பொறுத்தே நிவாரண உதவிகள் வழங்க முடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் இன்று அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மறுசீரமைப்பு, நிவாரணம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 30 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ரேஷன் அட்டைகளுக்கும் தலா ரூ.4,000 வழங்கலாமா அல்லது ரூ.5,000 வழங்கலாமா என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!