கோவையில் அதிர்ச்சி... மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் கைது!
அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் கபடி பயிற்சியாளரைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் எஸ்.ஆர்.எஸ். நகரை சேர்ந்தவர் அருண்குமார் (38). இவர் கபடி மற்றும் கைப்பந்து பயிற்சி மையம் நடத்தி வரும் நிலையில், சூலூர் அருகே அரசு பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு கபடி மற்றும் கைப்பந்து பயிற்சி அளித்து வருகிறார்.

கடந்த 2 மாதமாக அருண்குமாரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அவர் பள்ளி மாணவிகளை வேறுவிதமாக பார்ப்பதும், சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் 4 மாணவிகள், பள்ளியில் உள்ள மைதானத்தில் தனியாக இருந்தனர். அவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன் என்று அருண்குமார் அழைத்துச் சென்றார். பின்னர் 4 மாணவிகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியையிடம் இது குறித்து புகார் தெரிவித்தனர். அதை கேட்டு தலைமை ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இது குறித்து கருமத்தம்பட்டி மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கபடி பயிற்சியாளர் அருண்குமார், பயிற்சி கொடுக்கிறேன் என்ற பெயரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் வேறு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
