பிரபல பாடகரின் தாயார் 58 வயதில் மீண்டும் கர்ப்பம்... ரசிகர்கள் கொண்டாட்டம்!
பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கேங்ஸ்டர் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் செயற்கை கருத்தரிப்பு மூலம் 58 வயதில், அடுத்த குழந்தைக்கு தயாராகி உள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் பின்னணியில் இளம் பாடகராக புகழ் பெற்றிருந்தவர் சித்து மூஸ்வாலா. இவருக்கு இந்தியாவுக்கு அப்பாலும் இசை ரசிகர்கள் உண்டு. ஆனால் துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் அவரது இசைப் பாடல்கள் சர்ச்சையிலும் சிக்கி வந்தன. போட்டி மாபியாக்களின் விரோதத்தையும் சித்து சம்பாதித்தார். அந்த வகையில் 2022 மே மாதம் கனடா பின்னணியிலான கேங்ஸ்டர் கும்பலால் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொல்லப்பட்டார்.
Sidhu Moosewala Comeback >> Poonam Pandey's. pic.twitter.com/iZSGFJiSYz
— Rav𝙔 (@imRavY_) February 27, 2024
28 வயதான சித்து மூஸ்வாலா அவரது பெற்றோருக்கு ஒரே வாரிசு என்ற நிலையில் அவர்களை பரிதவிக்க விட்டு இறந்தார். மகனை இழந்த துயரத்தில் ஓராண்டுக்கும் மேலாக தவித்து வந்த சித்துவின் பெற்றோர், பின்னர் அதிலிருந்து விடுபடும் முயற்சியில் இன்னொரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். சித்து மூஸ்வாலாவின் தாயார் சரண் சிங் 58 வயதானவர் என்பதால், அவருக்கு மருத்துவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை பரிந்துரை செய்தனர்.
வெற்றிகரமான ஐவிஎஃப் சிகிச்சையை அடுத்து, சித்துவின் தாய் சரண் சிங் கர்ப்பமானார். அடுத்த மாதம் அவரது பிரசவம் நிகழும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், சித்து மூஸ்வாலாவின் ரசிகர்கள் மத்தியில் இந்த தகவல் தீயாய் பரவி வருகிறது. சித்துவின் மரணத்துக்கு பழி வாங்கவும், நியாயம் கேட்டும் அவரது ஆதரவாளர்கள் துடித்து வருகின்றனர். அவர்களுக்கு சித்துவின் தாயார் மீண்டும் கர்ப்பமாக இருப்பது பெருமகிழ்ச்சி தந்திருக்கிறது.
படுகொலையான சித்து மூஸ்வாலா மீண்டும் தனது தாய் வயிற்றில் பிறப்பார் என சித்துவின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். சித்து மூஸ்வாலா இசையுலகில் மட்டுமன்றி அரசியலிலும் ஈடுபட்டிருந்தார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து ஆம் ஆத்மிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில், ஆம் ஆத்மி வென்ற சூட்டில் பல பஞ்சாப் விஐபிக்களுக்கான போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றது. அந்த வகையில் போலீஸ் பாதுகாப்பை இழந்த 24 மணி நேரத்தில் சித்து மூஸ்வாலா அவரது எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!