Swiggy டெலிவரியின் போது ஆபாசமாக திட்டிய இளம்பெண்... கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!
சென்னை கொளத்தூர் வரலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜெகதீசன். பிளம்பர் வேலைப் பார்த்து வரும் இவரது மூத்த மகன் பவித்திரன் (21). வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் பிகாம். 3ம் ஆண்டு படித்து வந்தார். இளைய மகள் கோகிலா அண்ணாமலையில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
பவித்திரன் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக ஸ்விக்கி மூலமாக உணவு டெலிவரி செய்யும் வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி கொரட்டூர் ஏவிஎஸ் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நிஷா என்பவர் Swiggy ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அப்போது பவித்திரன் அவர் ஆர்டரில் குறிப்பிட்டிருந்த லொக்கேஷனுக்கு சென்று பார்த்த போது அங்கு யாரும் இல்லாததால் சுற்றி அலைந்தார். பின்னர் நிஷாவை தொடர்பு கொண்டு, நீங்கள் குறிப்பிட்ட லொகேஷனில் வந்துவிட்டேன். யாருமில்லை என்று கேட்ட போது, ‘தற்போது நீ எங்கள் வீட்டின் பின்புறத்தில் இருப்பதாகவும் ஆகையால் முன்பக்கம் வந்து உணவு கொடுத்து விட்டு செல்லுமாறும்’ நிஷா கூறியதாக தெரிகிறது.
அதற்கு பவித்திரன் நீங்கள் அனுப்பிய லொகேஷனில் தான் நான் நிற்கின்றேன். இங்கு வந்து உணவை வாங்கி செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த நிஷா ஊழியர் பவித்திரனை தகாத வார்த்தையில் ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான பவித்திரன் கடந்த 13ம் தேதி நிஷா வீட்டிற்கு சென்று கல்லால் ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டு வந்துள்ளார். அதன்பின்னர் கடந்த 15ம் தேதி துபாயில் இருந்து நிஷாவின் கணவர் சென்னை வந்திருந்த நிலையில், தனது கணவரிடம் நிஷா நடந்தவற்றை கூற உடனே அவரது கணவர் இது குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் பவித்திரன் மீது புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் பவித்திரனை விசாரணைக்கு அழைத்து சென்று அவர் மீது 75 சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அனுப்பி வைத்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கல்லூரி மாணவன் பவித்திரன் நேற்றிரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பவித்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பவித்திரன் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த கடிதத்தில், “என் மரணத்திற்கு காரணம் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அந்த உணவு டெலிவரி செய்ய சென்ற இடத்தில் அவர்கள் என்னை கடும் வார்த்தையால் திட்டியதால் மட்டுமே. அது போன்ற பெண்கள் இந்த உலகில் இருக்கும் வரை பல மரணங்கள் நிகழும்” என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பெண்ணிடம் இது குறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
