பயங்கரம்... வீட்டோடு மூதாட்டி தீவைத்து எரித்து கொலை!!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அழகமடை கிராமத்தில் வசித்து வருபவ்ர் ராசு . அதே கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேலு . விவசாயிகளான இருவரும் உறவினர்கள் . இருவரது வீடுகள் அருகருகே அமைந்திருப்பதால் இவர்களுக்குள் நில பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்தது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சித்திரவேலு, ராசுவை பழிவாங்க திட்டமிட்டார். சித்திரவேலுவை தவிர அவருடைய குடும்பத்தினர் அனைவரும் கோவையில் உள்ளனர். ஆகஸ்ட் 30ம் தேதி இரவு ராசு, அவருடைய மனைவி மங்கையர்கரசி இருவரும் வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தனர். ராசுவின் தாயார் பாப்பு அம்மாள். இவருக்கு வயது 95. இவர் வீட்டு திண்ணையில் வெளியே கட்டிலில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த சித்திரவேலு, ராசுவின் வீட்டின் முன்பக்க கதவை சேர்த்து இரும்பு கம்பியால் கட்டி, கதவை திறக்க முடியாமல் பூட்டிவிட்டார். கதவில் இருந்து வெளியே வரை விறகுகளை வரிசையாக அடுக்கி மண்ணெண்ணெயை ஊற்றினார்.
பாப்பு அம்மாள் தூங்கிக்கொண்டிருந்த கட்டில் பகுதியிலும் மண்ணெண்ணெயை ஊற்றினார். அயர்ந்து தூங்கியதால் பாப்பு அம்மாளால் இதை கவனிக்க முடியவில்லை இதே போல் வீட்டின் பின்பக்க கதவையொட்டியும் விறகுகளை அடுக்கி அதிலும் மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டார். அனைத்து பகுதிகளிலும் தீப்பந்தம் மூலம் சித்திரவேலு தீ வைத்தார். தீ மளமளவென கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. கட்டிலில் படுத்திருந்த பாப்பு அம்மாள் மீதும் தீப்பிடித்து அலறித்துடித்தார். வீட்டுக்குள் படுத்திருந்த அவருடைய மகன் ராசு, மருமகள் மங்கையர்க்கரசி ஆகியோர் எழுந்து முன்பக்க கதவை திறக்க முயன்றனர். ஆனால் இரும்பு கம்பியால் கதவு கட்டப்பட்டிருந்தது.இதனால் அவர்களால் கதவைத் திறக்க முடியவில்லை. பின்பக்கத்திலும் தீ எரிந்து கொண்டிருந்தாலும் கதவை உடைத்து தப்பி வெளியே ஓடிவந்துவிட்டனர்.
அப்போது சித்திரவேலு தனது கையில் வைத்திருந்த தீப்பந்தத்தை ராசு, மங்கையர்க்கரசி மீது வீசி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் அங்கு ஓடி வந்தனர். அக்கம்பக்கத்திலும் அதற்குள் தீபரவி விட்டது. உடனே மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். சித்திரவேலுவின் வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். உடனடியாக தீயணைப்பு மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து இரு வீடுகளிலும் தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த பாப்பு அம்மாள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாப்பு அம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சித்திரவேலுவை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!