அரசு பேருந்தில் 25 சவரன் நகைகளைப் பறிகொடுத்த பெண்... போலீசார் அலைகழிப்பு!

புதுச்சேரியில் அரசு பேருந்தில் 25 சவரன் நகைகளைப் பறிகொடுத்த பெண்ணை, வழக்குப்பதிவு செய்வதற்கு போலீசார் அலைகழித்த நிலையில், எதிர்கட்சித் தலைவர் சிவா, முதல்வர் ரங்கசாமி கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்ற பின்னரே போலீசார் வழக்குப் பதிவு செய்த சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி உருளையன்பேட்டை கோவிந்தசாலை புதுநகர் கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்தவர் சலீம். இவரின் மனைவி சுமைனா பானு (24). இவர் சென்னையில் உள்ள தனது தங்கையின் வளைகாப்புக்காக மாமியார் ஜீவா(55), மற்றும் 3 ஆண் குழந்தைகளுடன் நேற்று மாலை வீட்டிலிருந்து ஆட்டோவில் புதிய பேருந்து நிலையம் சென்றார்.
அங்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் தமிழக அரசு பேருந்தில் சென்னைக்கு ஏறினார். அப்போது கையில் வைத்திருந்த சூட்கேசை, பேருந்தில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் வைத்திருந்தார். அந்த சூட்கேசில் 25 பவுன் நகை, பணம் இருந்தது.
பேருந்து காலாப்பட்டு பிள்ளைச்சாவடி அருகே சென்ற போது லக்கேஜில் வைக்கும் இடத்தில் இருந்த சூட்கேஸ் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சுமைனா பானுவும், அவரது மாமியார் ஜீவாவும் கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தினர்.
உடனே பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பேருந்தில் இருந்து யாரையும் இறங்கவிடாமல் காலாப்பட்டு காவல் நிலையம் கொண்டுசென்றனர். அங்கு பயணிகளை சோதித்தபோது சூட்கேஸ் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீஸார் புகாரை ஏற்காமல், உருளையன்பேட்டை காவல் நிலையம் செல்ல அறிவுறுத்தினர்.
இதையடுத்து அவர்கள் இரவு உருளையன்பேட்டை காவல் நிலையம் வந்து புகார் கொடுத்தனர். ஆனால் அவர்கள் புகாரை ஏற்க மறுத்து, சம்பவம் நடந்த இடத்தில் புகார் தெரிவிக்க கூறினர்.
இதனால் அவர்கள் தமிழகப்பகுதியான கோட்டகுப்பம் போலீசாரிடம் சென்றனர். அவர்கள் எங்கள் மாநிலம் இல்லை என்பதால் புதுச்சேரியில் புகார் கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்.இவ்வாறு நள்ளிரவு ஒரு மணி வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். இதையடுத்து இன்று உருளையன்பேட்டை திமுக தொகுதி பொறுப்பாளர் கோபாலை சந்தித்து போலீசார் புகார் எடுக்காததை பற்றி தெரிவித்தனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களையும், அந்த பகுதி மக்களையும் அழைத்து கொண்டு திமுக கோபால், எதிர்கட்சித்தலைவர் சிவாவை சந்தித்து முறையிட்டார்.
இதைத் தொடர்ந்து அனைவரும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில், கோரிமேட்டில் முதல்வர் ரங்கசாமியை அவரின் வீட்டில் சந்தித்தனர். அப்போது நடந்த சம்பவத்தை முழுமையாக விளக்கினர். போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுப்பது குறித்தும் தெரிவித்தனர்.
உடனடியாக முதல்வர் ரங்கசாமி, உருளையன்பேட்டை போலீசாரை வீட்டுக்கு அழைத்து பேசி வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கண்டறிய உத்தரவிட்டார். மேலும், காவல் எஸ்பிக்கள் வீரவல்லபன், லட்சுமி சவுஜன்யா, பக்தவச்சலம் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா