கரூர் சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை.. 2வது முறையாக புஸ்சி ஆனந்த் மனு தாக்கல்!
கரூர் சம்பவத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக புஸ்சி ஆனந்த் மனு தாக்கல் செய்தார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே மதியழகன் உள்பட 2 பேர் கைதாகி உள்ளனர். இதனால் புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கும்படி கேட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் 2-வது முறையாக புஸ்சி ஆனந்த், தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில், கரூரில் எங்கள் கட்சி கூட்டத்தின்போது போலீசாரின் அலட்சியம்தான் பலர் இறப்பதற்கு காரணம். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாலும், விசாரணை தொடக்க கட்டத்தில் இருப்பதையும் கருத்தில் கொண்டு ஏற்கனவே என்னுடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது.

ஆனால் இப்போது அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட யாரும் சிகிச்சையில் இல்லை. மேலும் இந்த சம்பவத்தை பொறுத்தவரை எனக்கு எந்த தொடர்பும் இல்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு மதுரை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
