இன்று மீண்டும் தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் ரயில் சேவை தொடக்கம்... பயணிகள் வரவேற்பு!
தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சில ரயில்களின் சேவை கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அவை மீண்டும் ஒவ்வொன்றாக புத்துயிர் பெற்று வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடியில் இதற்கு முன்னர் இருந்து கோவைக்கும் மற்றும் பகல் நேரத்தில் சென்னைக்கும் இணைப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.மீண்டும் அந்த ரயில் சேவை வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் ரயில் பயணிகள், வர்த்தக சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனால், தூத்துக்குடியில் இருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வாரத்தில் 2 நாட்கள் செல்லும் புதிய ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

இதனால், இந்த ரயில் சேவையை விரைவாக கொண்டு வர வேண்டும் என மாவட்ட பயணிகள் நலச்சங்கம், வர்த்தக தொழில் சங்கங்கள், உட்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று ஜூலை19ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சரான எல்.முருகன் கலந்து கொண்டு புதிய ரயில் சேவையை பச்சை கொடியை அசைத்து தொடங்கி வைக்கிறார்.இந்த ரயில் சேவையானது வாரத்தின் 2 நாட்களில் அதாவது வியாழன் மற்றும் சனிக்கிழமை இரவு 10.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும். அதே போல, மேட்டுப்பாளையத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும் என தெரிவித்துள்ளனர்.

இந்த ரயில் சேவை கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவித்துள்ளனர். இதனால், தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளதால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
