நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு.. 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர்.. என்னென்ன நிபந்தனைகள்?!
நாளை செப்டம்பர் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதல்நிலைத் தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்த தேர்வை 5 லட்சத்து 53,635 பேர் எழுத உள்ளனர்.
இந்த தேர்வுக்கு 5 லட்சத்து 53,635 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் ஒரேயொரு விண்ணப்பதாரரின் விண்ணப்பம் மட்டும் நிராகரிக்கப்பட்டு மற்ற அனைவரின் விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தவாறு நாளை குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத்தேர்வு நடைபெறுகிறது. இதற்காக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 188 தேர்வுக் கூடங்களில் 53,606 பேர் எழுதுகின்றனர். முதல்நிலைத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். 'ஒரு காலியிடத்துக்கு 10 பேர்' என்ற விகிதாச்சார அடிப்படையில் மெயின் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில் தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 645 ஆக இருப்பதால் ஏறத்தாழ 6,500 பேர் மெயின் தேர்வுக்கு செல்வார்கள்.
தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாளைய தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோகிராப் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வுக் கூடத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து தேர்வுக் கூடத்திற்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்வு நடைபெறும் நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரிய துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வர்களின் உடல் நலன் கருதி உரிய மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளான நாளை முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வு கூடத்திற்கு தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு காலை 9 மணிக்கு முன்னரே செல்ல வேண்டும். காலை 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூடத்தின் அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனத்தையும் எடுத்துச் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
