அமெரிக்க உளவுப் பிரிவு இயக்குனர் திடீர் ராஜினாமா!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தலில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதற்காக நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியாவில் பேசிக்கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி தோட்டா அவரது காதில் பாய்ந்ததால் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர்த்தப்பினார். டிரம்ப் மீது தாக்குதல் நடத்திய 20 வயது இளைஞர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இருப்பினும் டிரம்ப் மீதான தாக்குதல் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்காவின் உளவுப் பிரிவின் கவனக்குறைவே இதற்கு காரணம் என புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து நேற்று முன்தினம் மேற்பார்வை குழு விசாரணை நடத்தியது. அப்போது, டிரம்ப் மீதான தாக்குதலை கையாண்டது குறித்து உளவுப் பிரிவின் இயக்குனர் கிம்பர்லி சீட்டல் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 2022 முதல் உளவுப் பிரிவு இயக்குனராக பணியாற்றி வந்த கிம்பர்லி சீட்டல், டிரம்ப் பாதுகாப்பு விஷயத்தில் தான் கோட்டை விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். குற்றவாளி டிரம்பை நெருங்கி வந்தது எப்படி? என மக்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, டிரம்பின் உயிரை பறிக்க முயற்சித்த இச்சம்பவம் உளவுப்பிரிவின் தோல்வி என்றும், நடந்த குளறுபடிகளுக்கு முழு பொறுப்பை ஏற்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், உளவுப் பிரிவின் இயக்குனர் கிம்பர்லி சீட்டல் நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். இமெயில் மூலம் அவர் அனுப்பி உள்ள ராஜினாமா கடிதத்தில், "பாதுகாப்பு குறைபாட்டிற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். சமீபத்திய அசம்பாவித சம்பவங்கள் காரணமாக, கனத்த இதயத்துடன் இயக்குனர் பதவியில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா