பிரபல நடிகர் ‘அடடே மனோகர்’ காலமானார்... திரையுலகினர் அஞ்சலி!
பிரபல திரைப்பட நடிகர் அடடே மனோகர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். சென்னையைச் சேர்ந்த மனோகர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அவர், பணிக்கிடையே நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்.
சுமார் 3,500-க்கும் மேற்பட்ட முறை மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அதில் 6 நாடகங்களை இவரே எழுதி இயக்கி நடித்தார். நகைச்சுவை பாத்திரங்களை இவர் விரும்பி ஏற்று நடித்தார். மேடையிலேயே நேரடியாக பாடி நடிப்பதும் இவரது தனிச்சிறப்பு. வானொலி மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை எழுதியும், நடித்தும் உள்ள இவர், கிட்டதட்ட 15 தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
'அடடே மனோகர்’ என்ற பெயரில் 1986 மற்றும் 1993-ஆம் ஆண்டில் அப்போதைய டிடி தொலைக்காட்சியில் நாடகம் வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். நடிகர் வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் அவர் நகைச்சுவை காட்சிகளில் நடித்திருக்கிறார். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி காலமானார். இவருக்கு திருமணமான மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோகர், நேற்று இரவு காலமானார். இதையடுத்து அவரது உடல் சென்னை குமரன்சாவடியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!