பெண்களின் சபரிமலை பொங்கல் திருவிழா காப்புக்கட்டி கோலாகலத் தொடக்கம்.!
பெண்களின் சபரிமலை என கொண்டாடப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிப்ரவரி 25ம் தேதி லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் பொங்கல் வைக்கும் வழிபாடு நடைபெற உள்ளது. கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பொங்கல் திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது. மாசிமாதம் பூரம் நட்சத்திரத்தில் இந்த பொங்கல் திருவிழா நடைபெறும். சிலப்பதிகாரத்தின் நாயகியும், கற்புக்கரசியுமான கண்ணகி தான், ஆற்றுக்கால் பகவதி அம்மனாக கொண்டாடப்படுகிறார்.
சோழநாட்டிலிருந்து வணிகம் செய்ய பாண்டிய நாடு வந்து கணவனை அநியாயமாக பறிகொடுத்தாள். நியாயம் வேண்டி தன் மார்பை திருகி பாண்டிய நாட்டை எரித்தாள். ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக கேரளாவில் ஆற்றுக்காலில் இளைப்பாறியதாக தகவல்கள் உள்ளன. அவளின் சிறப்பை போற்றவே ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் எழுப்பப்பட்டதாக வரலாறு.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவில் இருக்கும் ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ பார்வதியின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கோபுரத்தில் கண்ணகியின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆலய நுழைவு வாசலில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சயபாத்திரத்தை தாங்கி, அரக்கியை அடக்கி அவள் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறாள். கருவறையில் 2 அம்மன் சிலைகள் உள்ளன. மூல விக்ரகத்தில் ரத்தினங்கள் பதித்து, தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. அம்மனின் கருவறை ஸ்ரீகோவில் என்று அழைக்கப்படுகிறது. ஆலய வளாகத்தைச் சுற்றி கணபதி, சிவன், நாகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் மட்டுமே பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஒரே இடத்தில் பொங்கல் வழிபாடு நடத்துவர். மாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 9வது நாள் பொங்கல் வழிபாடு நடைபெறும். இந்த வருட பொங்கல் திருவிழா இன்றைய தினம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியுள்ளது இன்று முதல் பகவதி அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். பிற்பகல் 2 மணிக்கு கோவிலின் முன்பு பல கிலோ மீட்டர் சுற்றளவு வரை லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட தொடங்குவர். இரவு 11 மணிக்கு மணக்காடு சாஸ்தா கோவிலுக்கு சாமி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு அடுத்த நாள் காலை 26ம் தேதி காலை 8 மணிக்கு அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்படுவார். அன்று இரவு காப்பு அகற்றப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!